image

நற்கருணை – ஒரு கத்தோலிக்கராகப் பதிலிறுத்தல்

ஜூன் 22, 2025: சில கிறிஸ்தவ சபைகள், கத்தோலிக்கர்களைப் போன்று நற்கருணை குறித்து நம்புவதில்லை என்பதற்காக நீங்கள் எப்போதாவது வியப்படைந்தது உண்டா? ஏன் சிலர் அதை வெறும் அடையாளம் என்று கூறுகின்றனர் -- அல்லது அது அவ்வளவு முக்கியமானதில்லை என்று கருதுகின்றனர்? உங்களுக்கும் கூட சில கேள்விகள் இருக்கலாம். அப்படியெனில் நீங்கள் தனியாக இல்லை. சிலர் அதை ஓர் அடையாளமாகத் தாழ்த்துகின்றனர். மற்றவர்கள் அதை ஒரு சடங்காக அல்லது விருப்ப மரபாகக் காண்கின்றனர்.


இந்த கட்டுரையில், நற்கருணை குறித்த சில பொதுவான தவறானப் புரிதல்களுக்குள் நாம் சென்று, அவற்றுக்கு எப்படி பதிலிறுக்க வேண்டும் என்று கண்டறிவோம். விவிலியம், மறைக்கல்வி, மற்றும் தொடக்க திருஅவைத் தந்தையரின் எழுத்துகள் ஆகியவற்றில் இருந்து, நற்கருணை மீதான கத்தோலிக்க நம்பிக்கை பொருளுள்ளது மட்டுமன்று – அது விவிலியம் சார்ந்தது, வரலாறு சார்ந்தது, மற்றும் ஆழ்ந்த விதத்தில் தனிநபருக்குரியது என்பதைக் காண்போம்.


தவறானப் புரிதல் 1: “நற்கருணை என்பது இயேசுவுக்கான ஓர் அடையாளம் மட்டுமே”

இதற்குத் தெளிவான மறுப்பு யோவான் 6:51-58ல் இருந்து வருகிறது, அங்கு இயேசு கூறுகிறார்: “எனது சதையை உண்டு, என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்... எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்” (யோவான் 6:54-55).


இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டோர் அதிர்ச்சியை வெளிப்படுத்திய பொழுது, இயேசு அவர்களைத் திருத்தவில்லை. அவர் தமது மொழியைச் செறிவாக்கி, “பற்கடிப்பு அல்லது மெல்லுதல்” எனப் பொருள்படும் “த்ரோகோ” என்ற கிரேக்க வினைச்சொல்லுக்கு மாற்றுகிறார். இந்த கடின போதனையால் சீடர்கள் பலர் விலகிச் சென்றபோது, இயேசு அவர்களைத் திரும்ப அழைக்கவில்லை. தாம் கூறியதைத் தெளிவாக உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் போகுமாறு விட்டுவிட்டார்.


இறுதி இரவுணவின்போது இயேசு, “இது எனது உடலைச் அடையாளப்படுத்துகிறது” என்று கூறவில்லை. அவர், “இது எனது உடலாக இருக்கிறது” என்றார் (மத்தேயு 26:26). இதில் காணப்படும் “எஸ்தின்” என்ற கிரேக்கச் சொல் அடையாளத்தை அன்றி, உண்மையாக இருக்கிறதைக் குறிக்கிறது. யூத மரபில், புனித உணவுகளில் உள்ள அடையாள முறை நேரடி கட்டளைகளுடன் ஒதுபோதும் குழப்புவதற்கில்லை -- இயேசு முற்றிலும் புதிய மற்றும் நேரடியான ஒன்றை நிறுவினார்.


தவறானப் புரிதல் 2: “இயேசுவின் மெய்யான நிகழ்மை நற்கருணையில் இல்லை -- அது ஒரு நினைவு மட்டுமே”

ஆம், இது ஒரு நினைவாக இருக்கிறது – ஆனால் விவிலியத்தில் “அனம்னெசிஸ்” என்ற கிரேக்கச் சொல்லுக்கு, வெறும் நினைவு+ட்டல் என்று அல்லாமல், கடந்தகால நிகழ்வில் பங்கேற்றல் என்பது பொருளாகும். இயேசு திருத்தூதர்களிடம் கூறினார்: “இதை என் நினைவாகச் (அனம்னெசிஸ்) செய்யுங்கள்” (லூக்கா 22:19). நற்கருணை கிறிஸ்துவின் ஒரே பலியை மீண்டும் நிகழ்மைப்படுத்துகிறது – அதை மீண்டும் நிகழச் செய்வதில்லை என்று திருஅவைக் கற்பிக்கிறது.  


மறைக்கல்வி (கதிம 1366) கூறுகிறது: “நற்கருணை ஒரு பலியாக இருக்கிறது, ஏனெனில் அது சிலுவைப் பலியை மீண்டும் நிகழ்மைப்படுத்துகிறது... கிறிஸ்துவின் பலியும் நற்கருணைப் பலியும் ஒரேயொரு பலியே.” 


1 கொரிந்தியர் 11:26ல் பவுல் எழுதுகிறார்: “நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.” இங்கு பவுல், நற்கருணையை ஓர் அடையாளமாக மட்டுமன்று – அது கிறிஸ்துவின் இறப்பின் உயிருள்ள அறிவித்தலாகவும், அவரது திரும்புதலின் (இரண்டாம் வருகையின்) எதிர்பார்ப்பாகவும் காட்டுகிறார். அது நம்மை கடந்தகால, நிகழ்கால, மற்றும் எதிர்கால மீட்பின் வரலாற்றில் ஈடுபடச் செய்கிறது. 



தவறானப் புரிதல் 3: “தொடக்க கிறிஸ்தவர்கள் மெய் நிகழ்மையில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை”

இது வரலாற்றின்படி சரியானதன்று. தொடக்க திருஅவைத் தந்தையர், அவர்களில் சிலர் நேரடியாகத் திருத்தூதர்களிடம் கற்றவர்கள், மெய் நிகழ்மையை ஒருமனதாக உறுதிப்படுத்துகின்றனர்.


அந்தியோக்கு புனித இக்னேசியுஸ் (சு. கி.பி. 107): “அவர்கள் (திரிபுரையாளர்கள்) நற்கருணையில் இருந்தும், செபத்தில் இருந்தும் விலகி இருக்கின்றனர், ஏனெனில் அவர்கள் நற்கருணையை நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் சதையாக ஒப்புக் கொள்வதில்லை” (ஸ்மைர்னியருக்கான மடல், 6:2).


மறைசாட்சி புனித யுஸ்தீன் (சு. கி.பி. 155): “நாம் இவற்றைச் சாதாரண அப்பம் மற்றும் பானமாக அன்றி... ஆனால் நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் சதையாகப் பெறுகிறோம்... ஆகவே இந்த உணவு இயேசுவின் சதையாகவும் இரத்தமாகவும் இருக்கிறது என்று நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம்” (முதல் காப்புரை, 66).


1 கொரிந்தியர் 10:16ல் பவுலும் இவ்வாறு எழுதுகிறார்: “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா!”


கிரேக்கச் சொல்லான “கொய்னோனியா” என்பது அடையாள நினைவை அன்றி, ஆழ்ந்த ஒன்றிப்பைக் குறிக்கிறது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவப் படிப்பினை ஆவணமான டிடாகே (சு. கி.பி. 90), நற்கருணைக்குரிய அமைப்பு மற்றும் மரியாதையை ஏற்கெனவே காட்டி, அருளடையாளத்தின் புனிதத்துவத்தில் தொடக்க திருவழிபாட்டின் நம்பிக்கையை உறுதிபடுத்துகிறது. 


தவறானப் புரிதல் 4: “இயேசுவில் நம்பிக்கை கொண்டிருந்தால் கத்தோலிக்கர் அல்லாதோரும் திருவிருந்து பெறலாம்”

இயேசுவில் நம்பிக்கை கொள்வது இன்றியமையாதது – ஆனால் நற்கருணை பெறுதல் என்பது கத்தோலிக்கத் திருஅவையின் கோட்பாடு, அருளடையாளங்கள், மற்றும் திருஅவை அதிகாரத்தோடு முழு ஒன்றிப்பை உறுதிபடுத்துவதாகும். நற்கருணை என்பது ஒன்றிப்பின் காணக்கூடிய குறியீடாக இருக்கிறதுளூ கத்தோலிக்க நம்பிக்கையைப் பகிராமல் அதைப் பெறுவது முரண்பாட்டை உருவாக்குகிறது.


மறைக்கல்வி (கதிம 1366) கூறுகிறது: “சீர்திருத்தத்தினால் பெறப்பட்ட திருஅவைச் சமூகங்கள்... நற்கருணை மறைபொருளின் சரியான மெய்மையை அதன் முழுமையில் பாதுகாத்து வைத்திருக்கவில்லை.” 


தொடக்க திருஅவையில், ஆயத்தநிலையினர் (திருமுழுக்கு பெறத் தயாரிப்போர்) நற்கருணை பெறுவதற்கு மறுக்கப்பட்டனர். புகுநிலை அருளடையாளங்கள் பெற்றவர்கள் மட்டுமே திருப்பலியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர், ஏனெனில் அது கிறிஸ்துவின் உடலுடனான முழு ஒன்றிப்பை வெளிப்படுத்துகிறது. 


1 கொரிந்தியர் 10:17ல் பவுலின் வார்த்தைகள் இதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன: “அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.”


நற்கருணை (திருப்பலி) என்பது வெறுமனே தனிநபர் ஆன்மிகச் செயல்பாடு இல்லை –இது நம்பிக்கையில் ஒன்றிப்பதன் பொதுவான குறியீடாக இருக்கிறது.


தவறானப் புரிதல் 5: “நற்கருணை பெறுவதற்கு நீங்கள் தயாரிப்பு செய்யத் தேவையில்லை”

கடவுளின் இரக்கம் முடிவற்றதாக இருக்கிறபோது, தயாரிப்பு இன்றி நற்கருணையை அணுகுதல் மறைநூலுக்கும் திருஅவைப் படிப்பினைக்கும் முரண்படுகிறது.


1 கொரிந்தியர் 11:27-29ல் புனித பவுல் ஒரு கடும் எச்சரிக்கை விடுக்கிறார்: “எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார். ... ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம்மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்.”


மறைக்கல்வி (கதிம 1366) இதை மறுவுறுதி செய்கிறது: “இந்த அழைப்புக்குப் பதிலிறுக்க, மிகச் சிறந்ததும் மிகத் தூயதுமான தருணத்துக்காக நம்மை நாமே தயாரிக்க வேண்டும்... சாவான பாவம் செய்த எவரும் திருவிருந்துக்கு வருவதற்கு முன்பாக ஒப்புரவு அருளடையாளம் பெற்றிருக்க வேண்டும்.”


தயாரிப்பில் உள்ளடங்குகிறவை:

1. அருள் நிலையில் (சாவான பாவமின்றி) இருத்தல்

2. நற்கருணைக்கான நோன்பை (1 மணி நேரத்திற்கு முன்பிருந்து) கடைப்பிடித்தல்

3. வணக்கம் மற்றும் பணிவுக்கான உணர்வைக் கொண்டிருத்தல்


புனித அகுஸ்தீன் எச்சரிக்கிறார்: “நற்கருணை என்பது உணவாக இருக்கிறது, ஆம் – ஆனால் தகுதியான முறை அதைப் பெறுகிறவருக்கு மட்டுமேளூ தகுதியற்றவருக்கு அது நஞ்சாகும்.” தொடக்க திருஅவை நற்கருணை பெறுவதற்கு, முறையான பாவ அறிக்கை மற்றும் நோன்பு உள்ளடங்கிய ஒழுங்குகளைக் கொண்டிருந்தது. திருப்பலியானது வழக்கமான நிகழ்வாக இருந்ததும் இல்லை, இருக்கிறதும் இல்லை, இந்த விண்ணக மறைபொருளுக்கு இதயம் மற்றும் உடலின் தயாரிப்புத் தேவைப்படுகிறது. அடிக்கடி, வணக்கத்துடன் நற்கருணை பெறுவது ஒரு கொடையாக இருக்கிறது – ஆனால் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.


அப்பத்தை விட மேலாக – வாழும் கிறிஸ்துவுடனான ஒரு சந்திப்பு

நற்கருணை என்பது ஓர் அடையாளம் அன்று, ஒரு நினைவு+ட்டலும் அன்று, மனிதக் கண்டுபிடிப்பும் அன்று. அது கிறிஸ்து தாமே, உண்மையாகவும் பொருள்மம் சார்ந்தும் – உடல், இரத்தம், ஆன்மா, மற்றும் இறைத்தன்மையோடு நிகழ்மைப்படுவதாக இருக்கிறது. உலகம் இதை கண்மூடித்தனமாக ஏற்க வேண்டும் என்று திருச்சபைக் கேட்கவில்லை – ஆனால் இயேசுவின் வார்த்தைகள், தொடக்க திருஅவையின் சாட்சியம், மற்றும் நூற்றாண்டுகள் தோறும் வழங்கப்பட்ட படிப்பினைகளின் ஆழத்தைக் கருத்தில் கொள்ள எல்லாரையும் அழைக்கிறது.


நற்கருணை பெறுதல் என்பது இயேசுவைப் பெறுதலாகும். ஒவ்வொரு கத்தோலிக்கரும் இந்த உண்மையைப் பெற்று – சொற்களால் மட்டுமின்றி, வணக்கம், ஆராதனை, மற்றும் மகிழ்ச்சியோடு அறிவிக்கட்டும்.

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP