- 24 June, 2025
மல்கன்கிரி, ஒடிசா, ஜூன் 21, 2025: மல்கன்கிரி மாவட்டத்தின் கோட்டமத்தேரு கிராமத்தில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது கடந்த சனிக்கிழமை காலையில் நடைபெற்ற கடுமையானத் தாக்குதலில் முப்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிகழ்வுக்கு நீதியும் நிவாரணமும் வேண்டுமென ஒடிசாவைச் சேர்ந்த ஆயர் பல்லப் குமார் லிமா அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
தகவல்களின்படி, அருகிலிருந்த கிராமங்களில் இருந்து 1,500 முதல் 2,000 பேர் கொண்ட கும்பல் ஒன்று கோட்டமத்தேரு கிராமத்தில் வந்திறங்கியது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கிராமத்தில் இருந்தவர்களைத் தாக்கி, உடமைகளைச் சேதப்படுத்தினர். இதில், குறைந்தது 20 பேருக்கு தீவிரக் காயங்கள் ஏற்பட்டன, மற்றவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த தாக்குதல் நிகழ்ந்த கிராமம் மல்கன்கிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மடபகா கிராம பஞ்சாயத்தில் உள்ளது.
இந்த கிராமம் தனிமையான இடத்தில் உள்ளதால், இந்த வன்முறை குறித்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் இதை அறிந்த அப்பகுதி போதகர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து காயமடைந்த பலரும் மீட்கப்பட்டு மல்கன்கிரி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் தற்காலிக நிவாரண முகாமாக மாறியுள்ள அப்பகுதி ஆலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு, குடிநீர், உடைகள் மற்றும் பாதுகாப்பான உறைவிடம் ஆகியவை தேவையாக உள்ளன. சமூகத் தலைவர்களும் மனிதநேயக் குழுக்களும் கிறிஸ்தவச் சிறுபான்மையினருக்கு உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் எதிரான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேசிய கிறிஸ்தவ வாரியத்தின் ஒடிசா பிரிவு தலைவரும், வடஇந்தியத் திருஅவையின் மூத்தத் தலைவருமான ஆயர் பல்லப் குமார் லிமா இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சமயச் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆயர் லிமா, துன்புறுத்தப்படும் சமூகங்களை அதிகாரிகள் பாதுகாக்க வலியுறுத்தி அமைதிப் பேரணிகளையும் நடத்தியுள்ளார்.
“இது ஒரு மோசமான மனிதநேய நெருக்கடி” என்று கூறியுள்ள ஆயர் லிமா, “அரசு உடனடியாக நிவாரணம் வழங்கி, பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மேலும் இத்தகைய தாக்குதல்கள் தொடராமல் தடுக்க வேண்டும். தங்களது சமய நம்பிக்கைக்காக எவரும் துன்புறக்கூடாது” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், குடிமைச் சமூகங்களும் நிவாரண முகமைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்றும், சமயச் சிறுபான்மையினருக்கு அரசியல் சாசனப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
புதிதாக நிகழ்ந்துள்ள மல்கன்கிரி தாக்குதல், ஒடிசாவில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நடைபெறும் தொடர்ச்சியான கவலைதரும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. சமூக வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பு நடைமுறைகளை அதிகரிக்கவும் மாநில மற்றும் தேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP